பெட்டாலிங் ஜெயா: பெட்டாலிங் ஜெயா ஓல்டு டவுன் பகுதியில் மலேசிய அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்டவிரோத குடியேறிகள் 200 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வட்டாரத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள சில பகுதிகளில் கடுமையான நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் உள்ளது. இந்த உத்தரவு வரும் 23ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அங்கு நேற்று பகலில் இந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி பேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் டிசைமி தவுட், “இந்தோனீசியா, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“முற்றிலும் முடக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
“அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அவர்களை குடிநுழைவு தடுப்புக்காவல் மையத்திற்குக் கொண்டு சென்றதில் எந்த ஆபத்தும் இல்லை,” என்றார் அவர்.
மலேசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை குறை கூறியுள்ள தொழிலாளர் ஆர்வலர்கள், இதர சட்டவிரோத குடியேறிகள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு முன் வராமல், ஒளிந்துகொள்ளக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் சுமார் 2.2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளதோடு, அங்கு சுமார் மூன்று மில்லியன் சட்டவிரோத குடியேறிகளும் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.