புத்ராஜெயா: மலேசியாவில் அடுத்த மாத முதல் வாரத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தால் பள்ளிகள் உள்ளிட்ட கூடுதலான துறைகள் திறக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நேற்று முன்தினம் 10 பேருக்கு மட்டும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த இரு மாத காலகட்டத்தில் ஒரே நாளில் இவ்வளவு குறைவானோருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. மலேசியாவில் கடந்த ஆறு நாட்களாக கொவிட்-19 மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
எனினும், நோன்புப் பெருநாள் விழாக்காலத்திற்கு பிறகு கிருமித்தொற்று சம்பவங்கள் மறுபடியும் தலைதூக்கும் சாத்தியம் குறித்து சுகாதார அமைச்சு கவலை கொள்வதாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.
“கடந்த 24 நாட்களாக நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதன் விளைவாக புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், விழாக்காலத்தின் தாக்கம் குறைத்து அமைச்சு கவலை கொள்கிறது. ஜூன் மாத முதல் வாரத்தில் அதன் தாக்கம் குறித்து தெரியவரும்,” என்று அவர் விவரித்தார்.
“ஜூன் மாதம் 9ஆம் தேதிக்கு இதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம். கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அப்போது தொடர்ந்து குறைவாக இருந்தால், சமுதாய மற்றும் கல்வித் துறைகள் திறக்கப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம்.
“எங்களது கொள்கைகளில் மாற்றங்கள் செய்வதில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்,” என்று அமைச்சின் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
மலேசியாவில் நோன்புப் பெருநாள் கடந்த 24, 25 ஆகிய தேதிகள் கொண்டாடப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 9ஆம் தேதி முடிவடையவிருக்கிறது.
இந்நிலையில், கொவிட்-19 நடைமுறைகளுக்கு மலேசியர்கள் உட்பட்டு நடக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை டாக்டர் நூர் ஹிஷாம் வலியுறுத்தினார்.