மலேசியாவில் இவ்வாண்டு மக்கள்தொகை 32.7 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு மக்கள்தொகை 0.2 மில்லியன் அதிகம்.
நேற்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் மலேசியாவின் தலைமை புள்ளிவிவர நிபுணர் முகம்மது உஸிர் மஹிதின் இதனைத் தெரிவித்தார்.
மலேசிய குடிமக்கள் அல்லாதோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 0.1 மில்லியன் குறைந்ததே மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மெதுவடைந்ததற்குக் காரணம் என்று டாக்டர் உஸிர் கூறினார்.
கடந்த ஆண்டு குடிமக்கள் அல்லாதோரின் எண்ணிக்கை 3.1 மில்லியனாக இருந்தது.
“கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்த காலகட்டத்தில் மலேசியாவில் இருந்த வெளிநாட்டினர் தாயகத்திற்குத் திரும்பியதாலும் மலேசிய எல்லைகள் மூடப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது,” என்று அவர் விவரித்தார்.
மலேசிய மக்கள்தொகையில் 29.7 மில்லியன் பேர் குடிமக்களாவர். குடிமக்கள் அல்லாதோரில் பெரும்பாலானோர் இந்தோனீசியர்கள் மற்றும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள்.
“குடிமக்களின் வளர்ச்சி விகிதம் 1.1 விழுக்காடு என நிலையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, அவர்களின் எண்ணிக்கை 0.3 மில்லியன் கூடியுள்ளது,” என்று டாக்டர் உஸிர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மலேசிய மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடையில் இவ்வாண்டு 0 முதல் 14 வரை வயதுடையவர்களின் எண்ணிக்கை 0.2 விழுக்காட்டுப் புள்ளி குறைந்துள்ளது.
மக்கள்தொகையில் 15 முதல் 64 வயது வரை உடையவர்களின் எண்ணிக்கை 0.1 விழுக்காட்டுப் புள்ளி குறைந்துள்ளது. குடிமக்கள் அல்லாதோரின் எண்ணிக்கை சற்று குறைந்ததே இதற்குக் காரணம் என டாக்டர் உஸிர் விளக்கமளித்தார்.
மாறாக, இதே காலகட்டத்தில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 0.3 விழுக்காட்டுப் புள்ளி கூடியுள்ளது.
பாலினத்தைப் பொறுத்தவரை, பெண்களைவிட ஆண்களே அதிகம் உள்ளனர். மலேசியாவில் 15.9 மில்லியன் பெண்களும் 16.8 மில்லியன் ஆண்களும் உள்ளனர்.
இனவாரியாக பார்க்கையில், இந்தியர்கள் மற்றும் சீனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சீனர்களின் எண்ணிக்கை 0.2 விழுக்காட்டுப் புள்ளி குறைந்து 22.6 விழுக்காடாக உள்ளது. இந்தியர்களின் எண்ணிக்கை 0.1 விழுக்காட்டுப் புள்ளி குறைந்து 6.8 விழுக்காடாக உள்ளது. மாறாக, மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 0.3 விழுக்காட்டுப் புள்ளி கூடி 69.6 விழுக்காடாக உள்ளது.