மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்த காலத்தில் விதவிதமான சமையல் செய்முறைகளை ‘சுகு பவித்ரா’ எனும் யூடியூப் சேனலில் பதிவேற்றி பிரபலமான சுகு - பவித்ரா தம்பதிக்கு இடையே பிரச்சினை மூண்டிருக்கிறது.
மலாய் மொழியில் சரளமாகப் பேசி அசத்தும் அவர்களது காணொளிகளை 780,000 பேர் பார்த்து வருகின்றனர். இதன் தொடர்பில் அவர்களைப் பாராட்டி, பவித்ராவுக்கு ‘ஐகான் ஆஃப் ஈப்போ’ எனும் பட்டத்தை கடந்த திங்கட்கிழமை ஈப்போ நகர மேயர் வழங்கினர்.
அந்தப் பாராட்டு நிகழ்ச்சியின்போது சுகுவின் பெயரை பவித்ரா குறிப்பிடாததுதான் தம்பதியருக்கு இடையிலான பிரச்சினைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டதாக, தி ஸ்டார் செய்தி குறிப்பிட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) ராஜா பெர்மைசுரி பைனன் மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக பவித்ரா சென்றிருந்தபோது சுகு அவரைத் தாக்கியதாகக் கூறப்பட்டது. சுகு அப்போது மது அருந்தியிருந்ததாகவும் அவரிடம் அரிவாள் ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் பவித்ரா, தம் கணவர் சுகு மீது போலிசில் புகார் அளித்தார். அதன் தொடர்பில் சுகுவை போலிசார் கைது செய்தனர். மூன்று நாட்கள் விசாரணைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதனையடுத்து, கையில் விலங்குடன் இன்று காலை 8.45 மணியளவில் சுகு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
நச்சு, வெடிபொருள்கள் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் 1958 சட்டத்தின் 6(1) பிரிவின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை நீதிபதி நீதிமன்றத்தில் வாசித்தபோது 29 வயதான சுகு அந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை ராஜா பெர்மைசுரி பைனன் மருத்துவமனையின் அந்திமக்கால வார்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் 26 இஞ்ச் அரிவாளை வைத்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
சுகுவின் தரப்பு வழக்கறிஞர் மஹிந்தர்ஜித் சிங், சுகுவுக்கு பிணை கோரினார். சுகு மீது அவரது மனைவி பவித்ரா அளித்த போலிஸ் புகார் மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இது தம்பதியருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை என்றும் அவர்களுக்கு 2, 8 வயதுகளில் இரண்டு மகன்கள் இருப்பதையும் சிங் குறிப்பிட்டார்.
பவித்ராவால் 10,000 ரிங்கிட்வரையிலான பிணைத் தொகை மட்டுமே செலுத்த முடியும் என்று அவர் கோரிக்கை வைத்ததையடுத்து, அவருக்கு 10,000 ரிங்கிட் பிணைத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
கடந்த 9ஆம் தேதி பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவும் இந்தத் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, பிர்தமர் முகைதீன் இந்தத் தம்பதிக்கு ஒரு கேமரா, மைக்ரோ வேவ் அடுப்பு உள்ளிட்ட சமையலுக்குப் பயன்படும் சாதனங்களையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.