காதலருடன் சேர்ந்து தமது 5 வயது மகனைக் கொன்ற குற்றத்துக்காக 36 வயது டி. காயத்ரிக்கு பினாங்கு உயர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. அவரது காதலரான 30 வயது ஆர். சரவணனுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கொலை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
காயத்ரியும் சரவணனும் சேர்ந்து சிறுவனைக் கொன்றது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த நீதிபதி அகமது ஷரிர் முகம்மது சாலே தெரிவித்தார்.
நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி, காயத்ரியும் சரவணனும் சாகும் வரை தூக்கிலிடப்படுவர். நீதிபதி தீர்ப்பளித்தபோது காயத்ரியும் சரவணனும் குற்றவாளிக் கூண்டில் இருந்தனர்.
இருவரும் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தீர்ப்பைக் கேட்டு தமது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை காயத்ரி துடைத்ததாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.
தீர்ப்பை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்யவிருப்பதாக அவர்களது வழக்கறிஞர்கள் கூறினர். 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி காலை 8 மணிக்கும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (check dates) மாலை 4.05 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கெடா மாநிலம் கூலிம் நகரில் உள்ள தாமான் கெலாடியில் இருக்கும் வீட்டில் 5 வயது எஸ். கவியரசனை காயத்ரியும் சரவணனும் கொன்றனர்.
போர்வையால் சுற்றப்பட்டிருந்த அந்தச் சிறுவனின் சடலம் பினாங்கு மாநிலம் பட்டர்வர்த்தில் உள்ள புக்கிட் தெங்காவில் இருக்கும் செம்பனைத் தோட்டத்தில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதியன்று கண்டெடுக்கப்பட்டது.