மலேசியாவின் சாபா மாநில சட்டமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய ஆளும் தேசிய கூட்டணியின் தலைவரும் பிரதமருமான திரு முகைதீன், மக்களின் பிரச்சினை களுக்குத் தீர்வு கண்டு வருவதாகத் தெரிவித்தார்.
தேசிய கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் மக்கள் சிரமப்படுவதை காண விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
“நாட்டின் நிதியை முறையாக நிர்வகித்து வருகிறேன். இவையெல்லாம் எனக்காக அல்ல. நாட்டு மக்களுக்காக செய்கிறேன். நான் ஊழல்வாதி அல்ல,” என்று பிரதமர் முகைதீன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே சாபா மாநிலத்துக்கு நேரடியாக வராமல் காணொளி வழியாக பேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் வாரிசான் பிளசுக்கு ஆதரவு திரட்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பணம் கொடுத்து வாங்கும் அரசாங்கத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும்,” என்று டாக்டர் மகாதீர் கேட்டுக் கொண்டார். “பொதுத் தேர்தலில் மக்கள் தாங்கள் விரும்பும் அரசாங்கத்தை ஏற்கெனவே தேர்ந்தெடுத்து விட்டனர். தற்போது தேர்தல் தேவையில்லாதது,” என்று அவர் குறிப்பிட்டார். சாபா மாநிலத்தில் 73 தொகுதிகளிலும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. வரும் 26ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுகிறது.