பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கூடிய விரைவில் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட்-19 நிலவரம் இன்னமும் கட்டுக்குள் இருப்பதாக மக்களுக்கு நேற்று உத்தரவாதம் அளித்த அவர், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் நிலவரத்தைத் திறம்பட கையாண்டு வருவதாகச் சொன்னார்.
மலேசியாவில் நேற்று முன்தினம் மட்டும் 287 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 128 சம்பவங்கள் அலோர் ஸ்டார் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் சிறைச்சாலை பணியாளர்கள் தொடர்பானவை என்று தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக திரு முகைதீன் கூறினார்.
“எஞ்சிய சம்பவங்கள் சாபாவிலும் வேறு ஒரு சில மாநிலங்களிலும் பதிவாகின. கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இதுகுறித்து பொதுமக்களின் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
“இப்போதைக்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. பல்வேறு அரசாங்க அமைப்புகளின் ஒத்துழைப்பு மூலம் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் திரு முகைதீன் கூறினார்.
‘பொது முடக்கம் அறிவிக்கப்படாது’
மலேசியாவில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்ற ஊகத் தகவலை தற்காப்பு முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்துள்ளார்.
“நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையா? பலரும் இதைப் பற்றி கேட்கிறார்கள். இல்லை, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நடைமுறைப்படுத்தமாட்டோம்,” என்று செய்தியாளர்களிடம் திரு இஸ்மாயில் கூறினார்.
“சிலாங்கூரில் நேற்று முன்தினம் 31 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. மற்ற மாநிலங்களில் புதிதாக ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது கவலை தரும் போக்கல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யத் தடை விதிக்கப்படலாம் என்றும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதற்கிடையே, மலேசியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 317 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.