மலேசியாவில் கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் நாடு தழுவிய முடக்கநிலையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மாறாக, நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் நேற்று அறிவித்தார்.
நாட்டு மக்களிடம் நேற்று மாலை உரையாற்றிய திரு முகைதீன், “மீண்டும் பொது முடக்கத்தை அறிவித்தால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நாட்டின் சமுதாய, பொருளியல் கட்டமைப்பு கவிழ்ந்துவிடும் ஆபத்து ஏற்படக்கூடும்,” என்று எச்சரித்தார்.
கிழக்கு மலேசியாவின் சாபா மாநிலத்தில் நோய்த்தொற்று அதிகரித்திருப்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் காரணமாக இருந்ததை திரு முகைதீன் ஒப்புக்கொண்டார். என்றாலும், இந்தத் தேர்தலைத் தவிர்க்க முடியவில்லை என்று அவர் சொன்னார்.
சாபா ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டதால் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியிருந்ததாக அவர் விளக்கமளித்தார். ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படவில்லை என்று திரு முகைதீன் சொன்னார்.
நோய்த்தொற்று புதிய உச்சம்
இந்நிலையில், மலேசியாவில் புதிய உச்சமாக மேலும் 691 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நோய்த்தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டின. அந்நாட்டில் 432 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று அறிவிக்கப்பட்ட நோய்த்தொற்றுச் சம்பவங்களில் 397 சம்பவங்கள் கெடா மாநிலத்தில் பதிவாகின.
அம்மாநிலத் தலைநகர் அலோர் ஸ்டாரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளிடம் கிருமி பரவியதே அதற்குக் காரணம் என்று நேற்று மெய்நிகர் வழியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சாபா மாநிலத்தில் 219 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அதற்கு அடுத்த நிலையில் சிலாங்கூரில் 38 பேருக்குத் தொற்று உறுதியானது.
கொவிட்-19 தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவில் இம்மாதம் 1ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 200க்கும் அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
சாபாவில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கும் மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான பயணங்களுக்கு இன்று தொடங்கி இம்மாதம் 20ஆம் தேதி வரை மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதனை நேற்று அறிவித்த மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளோருக்கு அவர்களது சூழ்நிலையைப் பொறுத்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.