மலேசியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,228 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக நேற்று அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்தது.
கிழக்கு மலேசியாவின் சாபா மாநிலத்தில் மட்டும் 889 பேருக்குத் தொற்று உறுதியானதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நோய்த்தொற்றால் மேலும் எழுவர் உயிரிழந்துவிட்டனர். அவர்களையும் சேர்த்து அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று அதிகரிப்பதால் முன்களப் பணியாளர்களுக்கு சோர்வு
இதற்கிடையே, மலேசியாவில் கொவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடிவரும் முன்களப் பணியாளர்கள், கூடுதல் பணிச்சுமை காரணமாக சோர்வடைந்து இருப்பதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்ட அவர், மருத்துவப் பணியாளர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து இருப்பதாகக் கூறினார். மலேசியாவில் அண்மைக் காலமாக நோய்த்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து இருப்பதே அதற்குக் காரணம்.
நோய்த்தொற்று நிலவரத்தைச் சமாளிப்பதில் அனைவரும் ஒன்றுகூடி செயல்படுமாறு டாக்டர் நூர் ஹிஷாம் மலேசியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவில் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்க காரணமாக விளங்கிய சாபா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் இருந்து மலேசியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“கொவிட்-19க்கு எதிரான போரில் நமக்கு ஒற்றுமை தேவை. கடந்த 10 மாதங்களாக நமது முன்களப் பணியாளர்கள் கடுமையாகப் போராடி வந்துள்ளனர். ஆனால் வேலைப்பளு அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது.
“என்றாலும், இந்த நேரத்தில் அவர்கள் முயற்சியைக் கைவிட்டால் இவ்வளவு தூரம் நாம் கடந்து வந்த பயணத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் பதிவிட்டார்.
இதற்கிடையே, சாபா மாநிலத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஃபேஸ்புக் வழியாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.
“சாபாவில் இன்னமும் நோய்த்தொற்று குறையவில்லை. எனவே, சாபா மாநில அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 27 முதல் நவம்பர் 9 வரை நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
கொவிட்-19 பரவலைத் தடுக்க அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அத்துமீறியதற்காக நேற்று முன்தினம் 585 பேர் போலிசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக திரு இஸ்மாயில் தெரிவித்தார்.