கொவிட்-19 நோய்ப் பரவல் மோசமாக இருந்து வருவதால் மலேசியாவில் இப்போதைக்குத் தேர்தல் நடத்தாதிருப்பதே நல்லது என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பரிந்துரைத்து இருக்கிறார்.
சாபா மாநிலத் தேர்தலே அங்கும் நாட்டிலும் நிலவும் இப்போதைய கொரோனா பரவல் அலையின் தொடக்கப்புள்ளி எனக் குறிப்பிட்ட டாக்டர் நூர், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
“நிலையான வழிகாட்டு நடைமுறைகள் நடப்பில் இருந்தாலும் மக்கள் அவற்றுக்கு இணங்கி நடக்கிறார்களா என்பதே மிக முக்கியமானது,” என்று டாக்டர் நூர் சொன்னார்.
“சாபா தேர்தலில் இருந்து பாடம் கற்று வருகிறோம். மற்ற மாநிலங்களிலும் தேர்தலை நடத்தி, அதன்மூலம் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட மாட்டோம் என நம்புகிறோம்,” என்று சுகாதார அமைச்சின் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சரவாக் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில், விரைவில் அங்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.
அங்குள்ள பத்துசாபி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மரணமடைந்துவிட்டதால் அங்கு டிசம்பர் 5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சு பரிந்துரைத்தாலும் தேர்தல் நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது அரசாங்கமும் தேர்தல் ஆணையமுமே என்று டாக்டர் நூர் கூறினார்.
“தேர்தல் நடத்தப்பட்டே ஆக வேண்டும் எனில் வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து சிந்திக்கலாம்.
“அதாவது, மாவட்டங்களுக்கு இடையே பயணங்களுக்குத் தடை விதிப்பது, அதிகமானோர் ஒன்றுகூடத் தடை விதிப்பது, வீடுகளில் விருந்தினருக்கு அனுமதி மறுப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம்,” என்றார் அவர்.
அத்துடன், அஞ்சல் வழியாக வாக்களிப்பதையும் பரிசீலிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, மலேசியாவில் கடந்த திங்கட்கிழமையன்று புதிய உச்சமாக 1,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மேலும் 835 சம்பவங்கள் பதிவாகின.
இதுவரை மலேசியாவில் 28,640 பேரை கொரோனா தொற்றிவிட்டது. அவர்களில் 18,499 பேர் அதிலிருந்து தேறிவிட்டனர்; 238 பேர் உயிரிழந்துவிட்டனர்.