அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை மலேசிய நாடாளுமன்றத்தில் நாளை (நவம்பர் 6) தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், ஓர் அமர்விற்கு 80 எம்.பி.க்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மன்ற நாயகர் ஆர்ட் ஹாருண் அறிவித்து இருக்கிறார்.
அவர்களில் அரசாங்கத் தரப்பு எம்.பி.க்கள் 41 பேரும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 39 பேரும் அடங்குவர்.
மன்ற நாயகரின் இம்முடிவு குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
ஆனால், வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கலின்போது கட்சிக்கு இருவரை மட்டும் அனுமதிக்கலாம் என முன்மொழியப்பட்டதாகவும் நூறு பேராவது இருக்க வேண்டும் எனத் தான் வலியுறுத்தியதையடுத்து, இறுதியில் 80 பேரை அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது என்றும் திரு ஹாருண் விளக்கமளித்துள்ளார்.