மலேசியாவில் பெர்லிஸ், பாஹாங், கிளந்தான் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் நிபந்தனையுடன்கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் டிசம்பர் 6 வரை அது நடப்பில் இருக்கும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
தற்போது, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, சாபா மாநிலங்களில் நடப்பில் இருக்கும் நிபந்தனையுடன்கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 9ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அது மேலும் நீட்டிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சருமான திரு யாக்கோப் தெரிவித்தார்.
மலேசியாவில் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிபந்தனையுடன்கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்படி மாநிலங்கள், மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. அவசர பயணங்களுக்கு போலிஸ் அனுமதி பெறப்படவேண்டும்.
வேலைக்காக அத்தகைய பயணங்களை மேர்கொள்வோர் வேலையிட அனுமதி அட்டைகள் அல்லது கடிதங்களைக் காட்ட வேண்டும்.
அந்த மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதுடன், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இருவர் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லலாம்.
கிளந்தான், பெர்லிஸ், பாஹாங் ஆகிய மாநிலங்களில் மீட்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு கிருமித்தொற்று எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.