மலேசியாவில் இன்று 1,937 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,246 ஆகியுள்ளது. தற்போது 12,751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொவிட்-19 தொற்றால் இன்று புதிதாக 9 மரணங்கள் பதிவான நிலையில், கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.
சாபாவில் நால்வர், ஜோகூரில் மூவர், சிலாங்கூரில் ஒருவர், பினாங்கில் ஒருவர் என இன்று 9 மரணங்கள் பதிவாகின.
கொவிட்-19 தடுப்பூசிகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மலேசியா அவசரப்படப்போவதில்லை என்று அந்நாட்டு அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார்.
மலேசியாவுக்கு கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சுகாதார அமைச்சின் தேசிய மருந்தியல் ஒழுங்குமுறை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் முதலில் அவற்றை மதிப்பீடு செய்வர் என்று அவர் தெரிவித்தார்.
“மலேசியாவில் தடுப்பூசிகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க அரசியல் நெருக்குதல் இல்லை,” என்றார் அமைச்சர் கைரி.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அளித்துள்ள நெருக்குதல் காரணமாக ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளைப் பயன்பாட்டிற்கு அந்நாட்டின் உணவு, மருந்து நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அமைச்சர் கைரி மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளுடன் ‘கோவேக்ஸ்’ தடுப்பூசிகளையும் வரவழைக்க மலேசியா ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு கட்டங்கட்டமாக விநியோகிக்கப்படும் இந்தத் தடுப்பூசி மருந்துகள், மலேசிய மக்கள்தொகையில் 30 விழுக்காட்டினருக்குப் போட போதுமானவை.
இந்நிலையில், கொவிட்-19 கொள்ளைநோயை முடிவுக்குக் கொண்டுவர தடுப்பூசிகளைத் தயாரிக்கும் அவசரத்தில் அவற்றால் ஏற்படக்கூடும் கடுமையான பக்கவிளைவுகள் குறித்து தடுப்பூசி தயாரிப்பாளர்கள் கவனிக்காமல் விட்டுவிடக்கூடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
மலேசியர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கில், நாட்டில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவதற்கு முன் அவை முதலில் ஆராயப்பட்டு மதிப்பிடப்படும் என்று சுகாதார அமைச்சு மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.