மலேசியாவின் ‘டாப் கிளவ்’ நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு உதவ 3 நேரடி தொலைபேசி இணைப்புகளை அமைத்துள்ளது. ஒன்று நிறுவனத்துக்குள்ளேயும் மற்ற இரண்டும் ஒரு ஆலோசகர், ஒரு தணிக்கையாளர் ஆகியவர்களின் கண்காணிப்பிலும் இருக்கும்.
அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 5,000க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இனிமேல் அவ்வாறு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று நிறுவனம் தெரிவித்தது.
நேப்பாளத்தைச் சேர்ந்த 27 வயது யுபராஜ் கட்கா, ‘டாப் கிளவ்’ நிறுவனத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிட்டதுடன் கடந்த மே மாதத்தில், அந்த நிறுவனத்துக்குள் ஊழியர்கள் கூட்டமாக இருப்பதைப் படம் பிடித்து மனித உரிமை ஆர்வலர் ஒருவருக்கு அனுப்பினார்.
அதன் தொடர்பில் அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தச் சம்பவம் இப்போது நிகழ்ந்திருந்தால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கமாட்டார் எனக் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லீ கிம் மியோ, அந்த ஊழியர் நிலையை எங்களிடம் விளக்காமல் நிறுவனத்துக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடிய வேறு யாரோ ஒருவரிடம் புகைப்படத்தை அனுப்பினார் என்று குறிப்பிட்டார்.
மலேசியாவிலேயே ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ள 'டாப் கிளவ்' ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் கடந்த வாரம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.