கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டும் அதற்கான அறிகுறிகள் இல்லாதோர் முதலில் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மலேசிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் நிலையில், கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படாமல் இருக்கலாம் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியதாக ‘மலாய் மெயில்’ ஊடக நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது.
அதிகமான கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, கிருமி தொற்றியோரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட தளவாட விவகாரங்களில் சவால்கள் நிலவுவதையும் அவர் சுட்டினார்.
“நாள் ஒன்றுக்கு 1,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 சம்பவங்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அதிகமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்டபடியே கூடுதலானோருக்குத் தொற்று உறுதியாகி வருகிறது,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்கு வேறு இடமில்லை. நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000ஆக உயர்த்த நாங்கள் முயற்சிகள் எடுத்து வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களிடம் கொவிட்-19 பரிசோதனையை மலேசியா தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கான கட்டாய பரிசோதனை நடத்தப்படுவதை உறுதி செய்யும் அமலாக்கப் பணிகள் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கும்.
கிருமித்தொற்று அபாயம் உள்ள ஆறு மாநிலங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று மனிதவள அமைச்சர் எம்.சரவணன் கூறியதாக ‘தி ஸ்டார்’ இணையத்தளம் தெரிவித்தது. சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, சாபா, கூட்டரசுப் பிரதேசங்களான கோலாலம்பூர் மற்றும் லபுவான் ஆகியன அவை. இவற்றில் ஏறக்குறைய 800,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறது.
மற்ற மாநிலங்களுக்கு அமலாக்கம் பிப்ரவரியில் தொடங்கும். நேற்று முன்தின நிலவரப்படி, 68,460 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக திரு சரவணன் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களிடையே கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து 1.7 மில்லியன் ஊழியர்களுக்கு கட்டாய கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் முன்னதாக அறிவித்து இருந்தது.
வெளிநாட்டு ஊழியர்களை நெரிசல்மிக்க இடங்களில் அவர்களது முதலாளிகள் தங்க வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 26ஆம் தேதி இது நடப்புக்கு வந்தது.