மலேசியாவில் இரண்டு கும்பல்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிய காணொளி சமூக ஊடகங்களில் பரவி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதையடுத்து கும்பலைச் சேர்ந்த 14 பேரை போலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள் வட்டாரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக செராசில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்று காஜாங் மாவட்ட போலிஸ் தலைவரும் உதவி ஆணையருமான முஹமது சயித் ஹசன் தெரிவித்தார்.
“பாராங் கத்தியுடன் அவர்கள் சண்டை போட்டனர். இதில் காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவிய 44 வினாடி காணொளியில் பாராங் கத்தியை வைத்திருந்த சிலர் வாகனத்தை நோக்கி ஓடுவது பதிவாகியுள்ளது.
அப்போது டிரக் ஒன்று இரண்டு கார்கள் மீது மோதியது. அப்போது படம்பிடித்துக் கொண்டிருந்த சிலரைப் பார்த்து கும்பலைச் சேர்ந்த ஒருவன், படம்பிடிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளான்.