சரவாக்கின் மிரியில் போலிஸ் காவலில் இருந்த ஆடவர் ஒருவர் 16 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததன் தொடர்பில் 11 போலிசார் பதவியிறக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
“இந்த சம்பவத்தின் தொடர்பில் ஏற்கெனவே இரண்டு போலிஸ் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் வேறு 11 அதிகாரிகள் மீது பதவியிறக்கம் அல்லது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என JIPS ஆணையர் ஸம்ரி யாஹ்யா குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி 9ஆம் தேதி போலிஸ் காவலில் இருந்த ஆடவர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக குழந்தை சட்டம் 2001ன் கீழ் இம்மாதம் 9ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட இரண்டு போலிசார் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக மற்றொரு நபர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
காவல் நிலையத்திலேயே நிகழ்ந்த பாலியல் பலாத்காரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத சூதாட்ட வழக்கு ஒன்றின் தொடர்பில் உதவுவதற்காக ஜனவரி 8ஆம் தேதி காவலில் வைக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை, அடுத்த நாள் அதிகாலை 4 முதல் 5 மணிக்குள்ளாக, காவல் நிலையத்தின் மற்றொரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஓர் ஆடவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் ஆடவர், தம் கையிலிருந்த சாவியைக் கொண்டு இளம்பெண் இருந்த செல்லைத் திறந்து, அவரை காவல் நிலையத்தின் கழிவறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த 2 காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடத்தப்படும்.
அந்தக் காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் எதுவும் பதிவாவதில்லை எனவும் குற்றம் நிகழ்ந்த கழிவறைப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.