மலேசியாவில் இன்று 6,145 பேர்க்கு கிருமித்தொற்று உறுதியாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. நேற்று பதிவான 7,393 பாதிப்புகளைக் காட்டிலும் இன்றைய எண்ணிக்கை குறைவு. இதனுடன் மலேசியாவில் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 2,390, 687 ஆக உயர்ந்துள்ளது. மரண எண்ணிக்கை தற்போது 27,770 ஐ எட்டியுள்ளது.
இதற்கிடையே, நியாயமான காரணமின்றி கொவிட்-19 தடுப்பூசியைப் போட மறுப்போருக்கு மலேசிய அரசாங்கம் அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் எச்சரித்திருக்கிறர்.
“சொல்வதற்கு மன்னிக்கவேண்டும். நீங்களாகவே தடுப்பூசி போடாவிட்டால் உங்களை மேலும் சிரமப்படுத்துவோம். உங்களுக்குத் தடுப்பூசி போடப்பட முடியாவிட்டால் பரவாயில்லை. மைசெஜாத்தெரா என்ற மின்னிலக்க விதிவிலக்கை நாங்கள் வழங்குவோம்,” என்று திரு கைரி, செர்டாங் மருத்துமனையில் பாடத்திட்டம் ஒன்றைத் தொடங்கியபோது நேற்று தெரிவித்தார்.
மலேசியாவில் தடுப்பூசி போடாதவர்கள் தற்போது வெளி இடங்களில் சாப்பிட முடியாது, கடைத்தொகுதிக்குள் செல்லவும் முடியாது. அவற்றையும் தாண்டி மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் தடுப்பூசி போடாதவர்கள்மீது விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
தடுப்பூசி போடாதவர்களை அடிக்கடி கொவிட்-19 சோதனைக்குச் செல்லக் கட்டாயப்படுத்தும் திட்டம் குறித்து அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாகத் திரு கைரி தெரிவித்தார்.
“ கொவிட்-19 தடுப்பூசியை மலேசியா தேசிய அளவில் கட்டாயப்படுத்தாது என்றாலும் ஒருசில துறைகளில் கட்டாயப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்கிறது,”
“உதாரணத்திற்கு, தடுப்பூசி போடாத ஆசிரியர்களால் பள்ளிக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்புவது குறித்து சில பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். கல்வித்துறையில் மட்டுமின்றி பொதுத்துறைக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் உணர்கிறோம்,” என்று கூறிய திரு கைரி, தனியார் துறையிலும் கட்டாய தடுப்பூசி முறை தேவை எனக் கருதுகிறார்.
மலேசிய மக்கள்தொகையில் 67.8 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 75.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.