ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் பற்றி எரியும் புதர் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் பரவும் புதர் தீயை அணைக்க போராடும் தீயணைப்பாளர்களுக்கு தற்போது நிலவும் சாதகமான பருவநிலை கைகொடுத்துள்ளது. அப்பகுதியில் குளுமையான தட்பவெப்ப நிலை காணப்படுவதாலும் மிதமான தென்றல் காற்று வீசுவதாலும் தீயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று தீயணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முழுமையாக புதர் தீயை கட்டுப்படுத்திவிட்டதாகக் கூற முடியாது என்றும் ஆனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீயை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வந்திருப்பதாகவும் ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் ஏழு நாட்களுக்கு முன்பு பரவிய புதர் தீயில் 71,000 ஹெக்டர் பரப்பளவு நிலம் நாசமானது. படம்: ஏஎஃப்பி