கார்டிப்: வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் தொடரில் கார்டிப்பில் நேற்று முன்தினம் அரங்கேறிய முதலாவது அரை இறுதியில் 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, 'பி' பிரிவில் 2வது இடத்தைப் பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உலக தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட இங்கிலாந்தை பதம் பார்த்து விட்டது. தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும்போது, 'பர்மிங்காமில் விளையாடி விட்டு வந்த நாங்கள் இங்குள்ள (கார்டிப்) சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தபடி எங்களை மாற்றிக்கொண்டு சரியாக செயல்படத் தவறி விட்டோம். எல்லாச் சிறப்பும் பாகிஸ்தானையே சாரும். அவர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 250 முதல் 260 ஓட்டங்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்' என்றார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்