இந்திய அணிப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ளே விலகிய நிலையில் அந்தப் பதவியைக் கைப்பற்ற உலகின் முன்னணி பயிற்றுவிப்பாளர்களும் முன்னாள் வீரர்களும் போட்டியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், முன்பின் அறியப்படாத இயந்திரப் பொறியாளர் ஒருவரும் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பது பெரும் வியப்பை அளித்துள்ளது. "கோஹ்லியின் திமிரை அடக்கி, அவரைச் சரியான வழிக்குக் கொண்டுவருவதுதான் எனது நோக்கம்," என்கிறார் உபேந்திரநாத் பிரம்மச்சாரி என்ற 30 வயதான அந்தப் பொறியாளர். மற்றவர்களைப் போலவே, கும்ளே பதவி விலகியதற்கு கோஹ்லிதான் காரணம் என்று இவரும் கருதுகிறார். எந்தவித கிரிக்கெட் பின்புலம் இல்லாதபோதும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்குத் தானே பொருத்தமான ஆள் என்று தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர்.
"திமிராக நடந்துகொள்வோரையும் என்னால் அனுசரித்துச் செல்ல இயலும் என்பதால் மெதுவாக என்னால் கோஹ்லியை சரியான வழிக்குக் கொண்டுவர முடியும். அதன்பிறகு முன்னாள் சகாப்தம் யாரையாவது பயிற்றுவிப்பாளராக பிசிசிஐ நியமித்துக்கொள்ளலாம். அதைவிடுத்து, முன்னாள் வீரர் ஒருவரைப் பயிற்றுவிப்பாளராக நியமித்தால் அவரும் கோஹ்லியால் அவமதிக்கப்படுவார்," என்பது இவரது வாதம். வேடிக்கையாகவும் தப்பும் தவறுமான ஆங்கிலத்திலும் இருக்கும் இவரது விண்ணப்பத்தை பிசிசிஐ குப்பையில் போட்டுவிடும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.