மிஷ்கின் இயக்கத்தில் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. அதைத் தொடர்ந்து அஜித் ஜோடியாக 'அசல்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 'தீபாவளி', 'ஜெயம் கொண்டான்', 'ராமேஸ்வரம்' என்று தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்த பாவனா அதன் பிறகு மலையாளப் பட உலகில் தஞ்சம் அடைந்தார். அங்கு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பாவனா காதல் வலையில் சிக்கியுள்ளதாகக் கிசுகிசு கிளம்பியது. அதை தொடக்கத்தில் மறுத்து வந்தவர், இப்போது காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
"நானும் கன்னடத் திரையுலகத் தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருகிறோம். கடந்த 2014ஆம் ஆண்டே நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தொடர் படப்பிடிப்பு காரணமாக அப்போது திருமணம் செய்யமுடியவில்லை. "இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலரின் பெயர், இதர விவரங்களை இப்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கான காலம் வரும்போது அனைவருக்கும் அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பேன்," என்கிறார் பாவனா.