திமத்தி டேவிட்
சிங்கப்பூர் தேசிய சுவர்ப்பந்து அணியின் ஆக இளைய வீரராக இருந்தாலும் ஆசிய இளநிலை மகளிருக்கான பிரிவில் இரண்டாம் நிலையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளார் சினேகா சிவக்குமார், 15. ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் பயின்று வரும் சினேகா, தாம் தங்கியிருந்த தனியார் கொண்டோமினியத்தில் எட்டு வயது முதலே தந்தையுடன் சேர்ந்து சுவர்ப்பந்து விளையாடத் தொடங்கினார். அடுத்த மூன்றாண்டுகளில் 'அல்டிமெட் ஸ்குவாஷ்' எனும் சங்கத்தில் சேர்ந்தார் சினேகா.
விளையாட்டில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் காட்டியதால் சங்கத்தின் நிறுவனரும் தேசிய சுவர்ப்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான சாண்ட்ரா வூ சினேகாவை தேசிய அணிக்கான தேர்வில் சேர ஊக்குவித்தார். அதில் தேர்ச்சி பெற்றதால் தொடக்கப்பள்ளியில் பயிலும் போதே சினேகாவுக்குத் தேசிய அணியின் பயிற்சித் திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. பல இளையர் பிரிவு ஆட்டங்களில் விளையாடி அனுபவம் பெற்ற சினேகா, சுவர்ப்பந்துக்குத் தேவையான மற்ற திறன்களையும் நுட்பங்களையும் தீவிர பயிற்சி மூலம் பெற்றார்.
சுவர்ப்பந்து பயிற்சியில் சினேகா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்