சாலைகளில் எண்ணெய்க் கசிவுகளைத் தடுக்க அபராதம் விதிக்கப்படுவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் பரிசீலனை செய்கிறது. இந்த ஆண்டில் சாலைகளில் நான்கு எண்ணெய்க் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்தன. அண்மைய ஆண்டுகளில் சாலைகளில் எண்ணெய்க் கசிவுகளுக்குக் காரணமானவர்களி டம் சேதமடைந்த சாலைகளைப் பழுதுபார்க்கும் செலவுக்காக $5,000 இலிருந்து $200,000 வரை ஆணையம் பெற்றதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெரும்பாலான எண்ணெய்க் கசிவுகள் விபத்துகளாலும் வாகனங்கள் பழுதடைந்து நின்றதாலும் நிகழ்ந்துள்ளன. எனவே, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான இயக்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியை போக்குவரத்து போலிஸ் தொடரும் என்றார் அமைச்சர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது வாகன ஓட்டுநர்களுக்கு சாலை நிலவரம் குறித்து தெரிவிக்க விரைவுச்சாலை கண்காணிப்பு ஆலோசனை முறையை மேம்படுத்துவது பற்றி ஆணையம் பரிசீலனை செய்யும் என்றும் திரு இங் தெரிவித்தார்.