கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் நஜிப்புக்கு எதிரான ஆதாரங்களை முன்னாள் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி கனி பட்டேல் வைத்திருந்ததாக அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள முகைதின் யாசின் மீண்டும் கூறுகிறார். திரு கனி பட்டேல் தம்மிடம் காட்டிய ஆதாரம் திரு நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டது பற்றியதாகும் என்றார் அவர். கனி பட்டேல் தம்மிடம் இன்னும் அதிகமான ஆதாரங்களைக் காட்டியதாகக் கூறிய முகைதின் யாசின், அவற்றை வெளியிட முடியாது என்றும் ஏனென்றால் வழக்கு இன்னும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை என்றும் சொன்னார்.
‚"நஜிப் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்," என்று கோலாலம்பூரில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் முகைதின் கூறினார். நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டை முன்னாள் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி கனி பட்டேல் தயாரித்தாரா என்ற கேள்விக்கு அதுபற்றி தனக்குத் தெரியாது என்று அவர் பதில் அளித்தார். திரு நஜிப்பை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தில் தமக்கு பங்கிருப் பதாகக் கூறப்படுவதை முகைதின் மறுத்தார். சதித்திட்டம் ஏதும் இல்லை என்றும் திரு நஜிப் மீது புகார் கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
தாம் துணைப் பிரதமராக இருந்த போது அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி கனி பட்டேலை சந்திப்பது வழக்கமான ஒன்றே என்று அவர் கூறினார். திரு நஜிப் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ள தற்போதைய அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அபாண்டி, திரு நஜிப் மீது மீண்டும் விசாரணையைத் தொடங்குமாறு சிறப்பு நடவடிக்கைக் குழு கேட்டுக்கொண்டிருப்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முகைதின் கூறியுள்ளார்.