ஏர் இந்தியா விமானத்தில் தமது அருகே அமர்ந்திருந்த மூதாட்டி மீது சிறுநீர் கழித்த ஆடவரை இந்தியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள ஏர் இந்தியா விமானப் பணியாளர்கள் நால்வரும் விமானிகளில் ஒருவரும் விமானத்தில் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல் துறையினர் ஷங்கர் மிஷ்ரா என்ற அந்த ஆடவரை வெள்ளிக்கிழமை இரவு பெங்களூருவில் கைது செய்து தலைநகருக்கு அழைத்துச் சென்றனர்.
தலைமறைவாக இருந்த அவரை டெல்லி காவல்துறையினர் தேடி வந்தனர்.
34 வயது ஷங்கர் மிஷ்ரா அவரது கைபேசியை அடைத்து வைத்தபோதும், சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி நண்பர்களுடன் தொடர்பு கொண்டார்.
மேலும் தமது கடன் பற்று அட்டையை அவர் பயன்படுத்தினார்.
அதை வைத்து ஷங்கர் மிஷ்ரா பெங்களூருவில் இருப்பதை அவர்கள் கண்டுகொண்டனர்.
நவம்பர் 26ஆம் தேதி அன்று நியூயார்க்கிலிருந்து புது டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வர்த்தகப் பிரிவில் தமதருகே அமர்ந்திருந்த மூதாட்டியின்மீது ஷங்கர் மிஷ்ரா சிறுநீர் கழித்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அது பற்றி காவல்துறையிடம் புகார் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த மூதாட்டியிடம் அவர் கெஞ்சியிருக்கிறார்.
ஷங்கர் மிஷ்ரா வேலை செய்துவந்த வங்கி நேற்று அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
அந்தச் சம்பவம் பற்றி ஏர் இந்தியா இந்த வாரம்தான் காவல்துறையிடம் புகார் அளித்தது.
அந்நபரின் செயலும் ஏர் இந்தியா அச்சம்பவத்தைக் கையாண்ட விதமும் பொதுமக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வர்த்தக் பிரிவில் வேறு இருக்கையோ மாற்று ஆடையே வழங்காமல் அவரது மன உளைச்சலை அதிகப்படுத்தும் வகையில் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் நடந்துகொண்டனர்.
ஷங்கர் மிஷ்ராவை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செல்வதற்கு நிறுவனம் 30 நாள் தடை விதித்தது.
ஏர் இந்தியா நடவடிக்கை
ஏர் இந்தியா விமான நிறுவனம், அந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள விமானப் பணியாளர்கள் நால்வரையும் விமானிகளில் ஒருவரையும் விமானப் பணியிலிருந்து விலக்கியது.
தங்கள் நடத்தையை விளக்கும்படியும் அவர்களுக்கு அது உத்தரவிட்டுள்ளது. மற்ற ஊழியர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்தச் சம்பவத்துக்காக ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்தது.