செம்பவாங், மார்சிலிங் போன்ற பகுதிகளில் வசிக்கின்ற, சிறார்களுடன் கூடிய வசதி குறைந்த குடும்பங்களுக்கு மேலும் ஆதரவு கிடைக்கவிருக்கிறது.
வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஒரு புதிய திட்டத்தின்கீழ், அந்த மாவட்டத்தில் வசிக்கும் 600க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் $500 கொடுக்கப்படும்.
'வடமேற்கில் சிறிய முயற்சிகள்' என்ற அந்தத் திட்டத்தின் படி, ஆறு வயதும் அதற்கும் குறைந்த வயது உள்ள சிறார்களுடன் கூடிய குடும்பங்கள் நன்மை பெறும்.
சிறாரின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் போடப்படும். இத்திட்டம் குறைந்தபட்சம் ஐந்தாண்டு நடப்பில் இருக்கு மென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஆகும் $2 மில்லியன் செலவில் பாதி நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டது. மீதி 2021ல் இந்த மன்றம் திரட்டிய தொகையாகும்.
புதிய திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், அந்தத் தொகையைக் கொண்டு குடும்பங்கள் அன்றாட செலவுகளை ஓரளவுக்கு ஈடுசெய்யலாம் என்றார்.
அதனால் தங்கள் பிள்ளைகளின் மேம்பாட்டில் குடும்பங்கள் ஒருமித்த கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.