தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இன்னும் இழுபறி யிலேயே இருந்து வருகின்றன. இதனால், இம்முறை குறைந்த பட்சம் நான்குமுனைப் போட்டியாவது இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் மக்கள் நலக் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக முன்கூட்டியே அறிவித்து விட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறிது காலம் சிறை யில் இருந்தபோது பெங்களூரிலேயே தமிழக அமைச்சர்கள் முகாமிட்டதால் அரசுப் பணிகள் தேக்கமடைந்தது, செம்பரம்பாக்கம் ஏரி விவகாரம், வெள்ள நிவாரணப் பணிகளில் சுணக்கம் போன்ற காரணங்களால் அதிமுகவின் வாக்குவங்கி சற்று சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காரணங்களால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல இம்முறையும் தனித்துப் போட்டி யிடுவதாக தடாலடி அறிவிப்பை வெளியிட அதிமுக தலைவி ஜெயலலிதா தயங்குகிறாராம். மேலும், திமுகவும் காங்கிரசும் ஏற்கெனவே கூட்டு சேர்ந்து விட்டன. தேமுதிக, அதிமுகவோடு சேர வாய்ப்பே இல்லை. சரத் குமாரும் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார். இனி திராவிட கட்சிகளுடன் கூட்டு இல்லை என்று அறிவித்து விட்டது பாமக. அதனால், இனிமேல் பாஜக அல்லது தமாகாவுடன் மட்டுமே கூட்டணி அமைக்கமுடியும் என்ற நிலையில் அதிமுக உள்ளது.