மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நாளை சிங்கப்பூருக்கு வருகையளிப்பார். அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
இஸ்தானாவில் இடம்பெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரு அன்வார் கலந்துகொள்வார் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங் ஆகியோரை திரு அன்வார் சந்திப்பார்.
இரு நாடுகளுக்கு இடையிலான அணுக்கமான, வலுவான உறவை திரு அன்வாரின் வருகை எடுத்துகாட்டுவதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
திரு அன்வாரின் ஒரு நாள் வருகையின்போது இரு நாடுகளுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
மலேசியாவின் வெளியுறவு அமைச்சர், போக்குவரத்து அமைச்சர், அனைத்துலக வர்த்தகத் தொழில் அமைச்சர், தொடர்பு, மின்னிலக்கத் துறை அமைச்சர், சரவாக் மாநில முதலமைச்சர், ஜோகூர் மாநில முதலமைச்சர் ஆகியோரும் திரு அன்வாருடன் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்வர்.