புவனேஸ்வர்: மாநில சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஒடிசாவில் பதற்றம் நிலவி வருகிறது.
அவரை அம்மாநிலக் காவல்துறையின் உதவி ஆய்வாளர் ஒருவர் இருமுறை துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசில் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவராவார்.
நேற்று ஜார்சுகுடா மாவட்டத்தில் நடைபெற இருந்த சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க அங்கு சென்றிருந்தார் நபா கிஷோர் தாஸ். அங்கு தனது காரில் இருந்து இறங்கிய அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஒடிசா காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் கோபால் தாஸ் என்பவர் அமைச்சருக்கு மிக அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அமைச்சரின் நெஞ்சில் இரு குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சாய்ந்து, மயக்கமடைந்த அமைச்சரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் தலைநகர் புவனேஸ்வருக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.