தென்சீனக் கடல் தொடர்பான நடத்தைக் கோட்பாடு
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் தொடர்பான நடத்தைக் கோட்பாடுகளை வகுப்பதற்கான பேச்சுவார்த்தை வரும் மார்ச் மாதம் தொடங்கும்.
ஆசியான்-சீனா நாடுகளுக்கு இடையிலான அப்பேச்சுவார்த்தையை ஆசியான் அமைப்பிற்கு இப்போது தலைமை வகிக்கும் இந்தோனீசியா முன்னின்று நடத்தும்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் இரண்டாம் நாளான நேற்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெத்னோ மர்சூடி இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19 முடக்கநிலைகள், வட்டாரக் கருத்தொற்றுமையைவிட சீனாவுடன் இருதரப்பு உறவுகளுக்குச் சில ஆசியான் நாடுகள் முன்னுரிமை அளிப்பது போன்றவையே தென்சீனக் கடல் நடத்தைக் கோட்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையின் மந்தமான வேகத்திற்குக் காரணம் என்று ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில், “தென்சீனக் கடல் நடத்தைக் கோட்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் முடிவிற்குக் கொண்டுவர ஆசியான் நாடுகள் கடப்பாடு கொண்டு இருக்கின்றன.
“அதே நேரத்தில், அது நிலைத்தன்மையுடையதாகவும் செயல்திறன்மிக்கதாகவும் செயல்படுத்தக்கூடியதாகவும் இருப்பது அவசியம்,” என்று திருவாட்டி ரெத்னோ செய்தியாளர்களிடம் கூறினார்.
தென்சீனக் கடல் பகுதிக்கு உரிமைகோராத இந்தோனீசியாவும் நாட்டூனா தீவுகளைச் சுற்றி உள்ள சிறப்புப் பொருளியல் மணடலத்தில் மீன்பிடி உரிமை தொடர்பில் சீனாவுடன் கருத்து வேற்றுமை கொண்டுள்ளது.
அது, தென்சீனக் கடலில் தன்னுடைய ‘ஒன்பது கீற்றுக் கோடு’ வரைபட எல்லைகளுடன் மேற்பொருந்துவதாக உள்ளது என்று சீனா கூறி வருகிறது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி, புதிய அணுகுமுறைகளை ஆராய வேண்டும் என்பதே ஆசியான் நாடுகளின் நோக்கம் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சின் ஆசியான் ஒத்துழைப்புத் தலைமை இயக்குநர் சித்தார்த்தோ ஆர் சூர்யோதிபுரோ தெரிவித்திருக்கிறார்.
அந்தப் புதிய அணுகுமுறைகள் எத்தகையவை என்பதை அவர் விளக்கவில்லை.
“அது ஆய்வுநிலையிலேயே இருக்கிறது. அது எத்தகைய வடிவம் பெறும் எனத் தெரியாது. ஆயினும், அது செயல்திறன்மிக்கதாக, நடைமுறைப்படுத்தத் தக்கதாக, அனைத்துலகச் சட்டத்திற்குப் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் இணக்கமாக இருக்கிறோம்,” என்றார் திரு சித்தார்த்தோ.
இந்த இருநாள் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் மியன்மார் நிலவரம், மற்ற வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து ஆக்ககரமாக விவாதிக்கப்பட்டது என்று திருவாட்டி ரெத்னோ குறிப்பிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆசியான் முன்வைத்த ஐந்து அம்சத் திட்டத்தின்மூலம் ஒருமித்த அணுகுமுறையுடன் மியன்மார் நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதில் ஆசியான் உறுப்பு நாடுகள் நேற்று முன்தினம் இணக்கம் தெரிவித்தன.
சிறப்புத் தூதரை நியமிப்பது, அந்தத் தூதர் மியன்மாருக்கு வருகை மேற்கொள்வது, அந்நாட்டில் வன்முறையை முடிவிற்குக் கொண்டுவருவது, அனைத்துத் தரப்பினருடனும் ஆக்ககரமான பேச்சுவார்த்தை நடத்துவது, ஆசியானின் மனிதநேய உதவி ஆகியவற்றை உள்ளடக்கியதே அந்த ஐந்து அம்சத் திட்டம்.
திமோர் லெஸ்டேவிற்கு சிங்கப்பூர் உதவும்: விவியன்
ஆசியான் கூட்டங்களில் திமோர் லெஸ்டே பங்கேற்பதை ஆசியான் நாடுகள் ஆதரிக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஆசியான் அமைப்பில் அந்நாடு முழு உறுப்பினராவதற்கு அதிகப் பொறுப்புகளும் கடமைகளும் உண்டு என்றும் அது ஒரு செங்குத்தான மலையில் ஏறுவதைப் போன்றது என்றும் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
அப்படி ஆசியானில் முழு உறுப்பினராகும் வகையில், திமோர் லெஸ்டே தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றும் வகையில் அந்நாடு தனது ஆற்றலை வளர்த்துக்கொள்ள உதவுவதில் சிங்கப்பூரின் முழு ஆதரவும் உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் பொருளியல் மேம்பாடு, நிதி, பொது நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு போன்ற துறைகளில் 800க்கும் மேற்பட்ட திமோர் லெஸ்டே அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தோனீசியாவின் தலைமையில் கடந்த இருநாள்களாக நடந்த முதலாவது ஆசியான் அமைச்சர்கள் கூட்டத்தில் பார்வையாளராக திமோர் லெஸ்டே முதன்முறையாகக் கலந்துகொண்டது.
‘மியன்மார் பிரச்சினையில் ஒருமித்த அணுகுமுறை’
இதற்கிடையே, மியன்மார் நெருக்கடியால் ஆசியான் நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டிருப்பினும் அதற்குத் தீர்வுகாண்பதற்கான அணுகுமுறையில் எல்லா உறுப்பு நாடுகளும் ஒருமித்திருப்பது அவசியம் என்று அமைச்சர் விவியன் வலியுறுத்தியுள்ளார்.
“மியன்மாரில் நிலைமை மோசமானால் அங்கிருந்து அகதிகளாக வெளியேறுவோர் எண்ணிக்கையும் அதிகமாகும். அதனால், அதிகம் பாதிக்கப்படப் போவது அண்டை நாடுகள்தான்,” என்றார் அவர்.
இப்போதைக்கு மியன்மாரில் வன்முறையை நிறுத்துவதே முக்கியம் என்று குறிப்பிட்ட டாக்டர் விவியன், தான் முன்வைத்த ஐந்து அம்சத் திட்டத்தை மியன்மார் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆசியான் நாடுகள் ஒருமித்து இருக்கின்றன என்றும் சொன்னார்.