ரச்சனா வேலாயுதம் /
ஆ. விஷ்ணு வர்தினி
கேலாங் சிராயில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இடம்பெறும் சந்தை அதன் முதல் வாரத்தில் 200,000க்கும் மேற்பட்டோரை ஈர்த்துள்ளதாக விஸ்மா கேலாங் சிராய் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு இரண்டாம் முறையாக நடைபெறும் சந்தையில் இவ்வாண்டு 700க்கு மேற்பட்ட கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போல இது பத்து மடங்கு.
மார்ச் 17ஆம் தேதி திறக்கப்பட்ட இச்சந்தை இம்மாதம் 22ஆம் தேதி வரை செயல்படும். அன்றாடம் காலை 10 மணி முதல் இரவு 11.59 மணி வரை சந்தை திறந்திருக்கும்.
கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு நண்பர்களுடன் சந்தைக்கு வந்தது உற்சாகம் அளிப்பதாகக் கூறினார் 22 வயது தி. நுவந்திரன்.
“இதற்குமுன் ‘ரம்லி பர்கர்’, குளிர் தேநீர், இனிப்புத் தின்பண்டங்கள் போன்றவற்றை சேர்ந்து உண்போம். இம்முறை, ‘ரோஜாக்’, ‘பரோட்டா வாஃபல்ஸ்’ உட்பட புதிய வகை தின்பண்டங்களையும் சுவைத்துப் பார்த்தோம்,” என்றார் நுவந்திரன்.
தாய்லாந்து, வியட்நாம் உணவுவகைகள் சந்தைக்குச் சிறப்பு கூட்டுவதாக அவர் கூறினார். ‘பரோட்டா வாஃபல்ஸ்’, ‘தோசை வாஃபல்ஸ்’ ஆகியன இளையர்களை ஈர்த்தன.
இதற்கிடையே, கடை வாடகை உயர்வு குறித்துக் கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர். அதிகபட்ச வாடகை $19,000 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டபோதும் சில கடைகளின் வாடகை $24,000வரை உயர்ந்து உள்ளது. போட்ட முதலை மீட்க சந்தையின் கடைசி இரண்டு வாரங்களை மலைபோல நம்பி இருப்பதாகச் சில கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
உயரும் விலைவாசி, வாடகை, பொருள், சேவை வரி ஆகியன கருதி பல கடைகள் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளன. உணவின் அளவு குறைந்தும் விலை அதிகமாகவும் இருப்பதாகக் கூறினார் தஸ்லிமா, 27.
“$3ஆக இருந்த ‘ரம்லி பர்கர்’ இப்போது $5. உணவு அளவும் குறைந்துவிட்டது. விலைவாசி இப்போது ஏறியுள்ளதுதான். ஆனால், காலங்காலமாக மலிவாக விற்கப்படும் இவற்றின் விலை மிகவும் கூடியுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது,” என்று தஸ்லிமா கூறினார்.
இரவுச்சந்தைகளில் 2002ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ‘மிஸ்டர் வடை’ எனும் கடை, இறால் வடைகளை $1க்கு விற்கிறது.
“2000களில் $2,000ஆக இருந்த கடை வாடகை, இப்போது $16,000ஐத் தொட்டுள்ளது,” என்று வருந்தினார் கடை உரிமையாளர் ராஜ் கோவின், 65. இருப்பினும், சேவை மனப்பான்மையுடன் சந்தையில் ஆக மலிவான விலையில் வடை விற்பதாக தெரிவித்தனர் அவரும் அவரின் இரு பிள்ளைகளும்.
இதற்குக் காரணம் ஆறு மாதங்களுக்கு முன்னர் மறைந்த திரு ராஜின் மனைவி திருவாட்டி மனோன்மணியின் வேண்டுகோள். ‘மிஸ்டர் வடை’ வர்த்தக யோசனைக்கு வித்திட்ட அவர், ரமலான் சந்தையில் மட்டும் லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொள்ளக்கூடாது என்று கூறுவதுண்டு. “அவர் நினைவாக, தொடர்ந்து லாபத்தைவிட ரமலான் சந்தை வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தி வருகிறோம்,” என்றார் திரு ராஜ்.
இந்த ஆண்டு வடை விற்கும் கடைகள் ஏராளம். இதனால் போட்டித்தன்மை அதிகரித்திருப்பதாகக் கூறினார், ‘ஃபேமஸ் வடை அங்கல்’ கடையின் உரிமையாளர் ரஹ்மத் நிஷா, 54.
கொவிட்-19 சூழலுக்குப் பின்னர் இரவுச்சந்தைகளின் எண்ணிக்கை கூடிவிட்டதால் ரமலான் சந்தையின் தனித்துவம் குன்றிவிட்டதாக அவர் கூறினார். இதனால், மக்களின் வரவேற்பைத் துல்லியமாக எடைபோட முடியவில்லை என்கிறார் இவர்.
உணவு மட்டுமின்றி பாரம்பரிய ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் போன்றவையும் இங்கு விற்கப்படுகின்றன.
முதன்முதலாக இரவுச்சந்தையில் இடம்பெற்றுள்ள ‘பீ வாவ்ட்’ ஆடை வர்த்தக நிறுவனர் காயத்ரி ராமசாமி, இது பெரிய வாய்ப்பு என்று குறிப்பிட்டார். இந்திய ஆடை, அணிகலன்களை பல இனத்தோரிடம் கொண்டு சேர்க்க முடிகிறது என்றாரவர்.
இவ்வாண்டின் சந்தையில் ஆர்க்கேட் விளையாட்டுகளிலும் மக்கள் ஈடுபட இயலும். வருகையாளர்கள், அலங்கரிக்கப்பட்ட மட்டக்குதிரைகள், கிளிகள் போன்றவற்றுடன் படம் எடுக்கவும் குதிரைச் சவாரி செய்யவும் வாய்ப்பு உண்டு.
நீண்ட நேரம் ஓய்வில்லாமல் காட்சிக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த விலங்குகளின் நலன் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
விழாக்கால உணர்வுக்கு இதுபோன்ற சந்தைகள் முக்கியப் பங்களிப்பதால் உயரும் விலைவாசியைப் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டு வருவதாகக் கூறப்படுகிறது.