துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கோடிகாட்டினார்
தொண்டூழியம் என்பது கடமை உணர்வையும் சககுடிமக்களை கவனித்துக்கொள்ள மக்களுக்குள்ள பொறுப்புணர்வையும் வலுவான நிலைக்கு மேம்படுத்த உதவுகிறது.
இதனால் மக்கள் பொருள்பொதிந்த வாழ்க்கையை வாழ வழி கிடைக்கிறது. சமூக கட்டமைப்புகள் விரிவடையவும் உதவி கிடைக்கிறது.
இருந்தாலும் தொண்டூழியம் என்பது தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தனிப்பட்டவர்கள் ஏதோ ஒன்றைச் செய்வது மட்டுமல்ல, அது ஒரே மக்களாக சிங்கப்பூரர்களை அடிப்படை ரீதியில் பிரதிபலிக்கிறது.
சிங்கப்பூரில் நாம் கொண்டிருக்க விரும்பும் சமூக பாணியையும் அது பிரதிபலிக்கிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
முதலாவது சிங்கப்பூர் தொண்டூழிய நிர்வாக மாநாட்டில் உரையாற்றிய திரு வோங், 20 ஆண்டுகளுக்கு முன் தொண்டூழியத்தில் ஈடுபட்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடுகூட கிடையாது என்றார்.
ஆனால் 2016ல் அந்த விகிதம் 35 விழுக்காட்டை தொட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
“இருந்தாலும் கொவிட்-19 காரணமாக அந்த விகிதாச்சாரம் 22 விழுக்காட்டிற்குக் குறைந்து இருக்கிறது. இந்தக் குறைவு தற்காலிகமான ஒன்றுதான் என்று நம்புவோம்.
“சிங்கப்பூரில் தொண்டூழியத்தின் இப்போதைய விகிதம் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இரண்டு மடங்குக்கும் மேலாக கூடியிருக்கிறது,” என்று அமைச்சர் கூறினார்.
பொருளியல் ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பு நாடுகளின் சராசரி அளவுடன் ஒப்பிடக்கூடிய நிலையில் நம்முடைய விகிதாச்சாரம் இருக்கிறது.
இருந்தாலும் இதில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக திரு வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தொண்டூழியத்தை வளர்க்கவும் நிலைநாட்டவும் மூன்று வழிகளை துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் தொண்டூழியத்தில் ஈடுபட அரசாங்கம் தொடர்ந்து ஊக்கமூட்டும். ஏற்புடைய அமைப்புகள், சமூக அமைப்புகளுடன் சிங்கப்பூரர்களை இணைக்க அது உதவும்.
இரண்டாவதாக, தொண்டூழியர்களைத் தாங்கள் ஈடுபடுத்தி தக்கவைத்துக் கொள்ளும் நடைமுறையை நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
நிறுவனங்கள் பொருள்பொதிந்த தொண்டூழியப் பணிகளைக் கவனமாக அடையாளம் கண்டு வடிவமைக்க வேண்டும். அவற்றுக்கு ஆதரவையும் பயிற்சியையும் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்து நிறுவனங்களும் நல்ல தொண்டூழிய நிர்வாக நடைமுறைகளைக் கைக்கொள்ள முடியும் என்ற துணைப் பிரதமர், இதைப் பொறுத்தவரை அரசாங்கம் மேலும் ஆதரவு வழங்கும் என்றார்.
தொண்டூழிய துறையில் அமைப்புகள் தங்கள் அனுபவங்களையும் தலைசிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்ள தோதாக அரசாங்கம் மேலும் பல தளங்களை உருவாக்கும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட சிண்டாவின் தொண்டூழிய நிர்வாக குழுவின் துணைத்தலைவரான திரு முகமது இர்ஷாத் தனது அமைப்பின் தொண்டூழிய நிர்வாக நோக்கங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“தொண்டூழியர்கள் மேலும் ஆக்கபூர்வமாகச் செயல்பட தங்களது திறன்களை மேம்படுத்துவது அவசியம். அதற்கான பட்டறைகளும் பயிலரங்குகளும் சிண்டாவால் ஏற்பாடு செய்யப்படுகின்றன,” என்று திரு இர்ஷாத் கூறினார்.
வெவ்வேறு தரப்பினரை தொண்டூழியர்களாக ஈர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இவர் குறிப்பிட்டார்.
கூடுதல் செய்தி:
கருணாநிதி துர்கா