சென்னை: இலங்கை கடற்படை தமிழர் விரோத நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழக மீனவர்களை மீன்பிடித் தொழிலைக் கைவிடும்படி இலங்கை கடற்படை நிர்ப்பந்திப்பதாகவும் சாடியுள்ளார்.
"தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு உட்பட மீன்பிடிக் கருவிகள் எதனையும் திருப்பி வழங்கமுடியாது என இலங்கை அமைச்சர் அறிவித்துவிட்டார். "இது தொடர்பாக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டதாகக் கூறுகிறார். மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிர் மற்றும் உடைமைகளையும் காக்க தவறிவிட்டது," என முத்தரசன் மேலும் கூறியுள்ளார். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.