குடியரசில் அருகிவரும் தாவர வகைகளைக் குறிக்கும் நான்கு அஞ்சல் தலைகளை சிங்கப்பூர் அஞ்சல் துறை (சிங்போஸ்ட்) நாளை வெளியிடவிருக்கிறது.
பல்லுயிர் விழா 2023ஐ முன்னிட்டு இவை வெளியிடப்
படுகின்றன. இந்த வருடாந்திரக் கொண்டாட்டம் சிங்கப்பூரின் இயற்கை மரபுடைமையைக் கட்டிக்காக்கும் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது என்று சிங்போஸ்ட் நேற்று தெரிவித்தது.
தேசிய பூங்காக் கழகமும் பல்லுயிர் வட்டமேசை அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழா சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஹார்ட்பீட்@பிடோக் வளாகத்தில் நடைபெறும்.
அஞ்சல்தலைகளின் விலை 31 காசிலிருந்து $1.50 வரை இருக்கும். கடுமையாக அருகி வரும் இந்த நான்கு தாவர வகைகள் தேசிய பூங்காக் கழகத்தின் தாவர இன மீட்புத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு தாவர வகைகளும் சிங்கப்பூரின் எஞ்சியுள்ள ஒரே நன்னீர் ஈர சதுப்புநிலத்தைக் கொண்ட நீ சூன் ஈர சதுப்புநிலக் காட்டில் கண்டு பிடிக்கப்பட்டன.
அஞ்சல்தலைகளுடன் கூடிய முதல்நாள் அட்டைகள் $5.05க்கும் அன்பளிப்பு தொகுப்புகள் $6.15க்கும் எல்லா அஞ்சல் நிலையங்கள், அஞ்சல் தலை விற்கும் கடைகள், shop.singpost.com எனும் இணையக் கடை ஆகியவற்றில் சனிக்கிழமை முதல் இருப்பு இருக்கும் வரை கிடைக்கும்.