கடந்த வாரம் ஜனவரி 3 - 9ஆம் தேதி வரை டெங்கியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை புதிய உச்சமான 554ஐ தொட்டுள்ளது. இதனை தேசிய சுற்றுப்புற வாரியம் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை ஆக அதிகமாக 448 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி 50 பேர் பாதிக்கப்பட்டனர். அதற்கு மறுநாளான திங்கட் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு 71 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வாரியம் தெரிவித்தது.
ஏடிஸ் கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களை வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. "ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துக் கொண்டுள் ளது. தட்பவெப்ப நிலையும் எப்போதும் போல் அல்லாமல் சற்று வெப்பமாகவே உள்ளது. "இந்த வெப்ப நிலை ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கத்திற்கு ஏதுவாக அமைந்துள்ளது," என்றது வாரியம். பொதுமக்கள், தங்கள் வீடுகளில் ஏடிஸ் கொசுக்கள் அண்டாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.