சிங்கப்பூரின் சாலைகள் இனிமேல் மேலும் பசுமையுடன் காட்சி அளிக்கும். விரைவில் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் எல்லாம் பச்சை நிறத்துக்கு மாறவுள்ளன. பேருந்துகளின் புதிய நிறத்தை போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் நேற்று நீ ஆன் சிட்டி சிவிக் பிளாசாவில் நடந்த பேருந்து கண்காட்சியில் வெளியிட்டார். பேருந்து நிறம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய ஒரு மாத கால ஆய்வில் 144 அதிக வாக்குகளில் பச்சை நிறம் தேர்வு பெற்றுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவுற்ற வாக்கெடுப்பில், பேருந்துகளை தற்போதுள்ள சிவப்பு நிறத்துக்கு பதிலாக பச்சை நிறத்துக்கு மாற்ற கிட்டத்தட்ட 29,000 பேர் ஆதரவளித்துள்ளனர். மொத்தம் 57,505 செல்லு படியாகும் வாக்குகள் பதிவாயின.
ஆண்டின் மத்தியில் பச்சை நிறப் பேருந்துகள் சாலைகளில் சேவையாற்றத் தொடங்கும். டவர் டிரான்சிஸ்ட் பேருந்துகள் முதல் பச்சை நிறப் பேருந்துகளாகத் திகழும். புதிய வடிவமைப்பைக் கொண்ட இரு ஈரடுக்கு பேருந்துகளும் நேற்றைய கண்காட்சியில் அறிமுகப் படுத்தப்பட்டன. இரண்டும் மூன்று கதவுகள், இரண்டு பக்க மாடிப்படிகள், வசதியான இருக்கைகளைக் கொண்ட பேருந்துகள். மேலும் கைத்தொலைபேசிகளுக்கு மின்னேற்றும் வசதி போன்ற புதிய உள்வடிவமைப்புகள் 2018ஆம் ஆண்டுவாக்கில் செயல்பாட்டுக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.