ஆளும் மக்கள் செயல் கட்சி அரசியல் வாதியான டேவிட் ஓங், 54, சொந்தக் காரணங்களுக்காக புக்கிட் பாத்தோக் நடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகி இருக்கிறார். அவரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் லீ சியன் லூங், அந்தத் தனித்தொகுதிக்கு குறித்த காலத்தில் இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
"கட்சி, எனது தொகுதி, குடும்பம் ஆகியவற்றின் நலன்களை உத்தேசித்து இப்போது விலகிக்கொள்வது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்," "என்னைப் பொறுத்தவரையில் நான் தனிப்பட்ட விவகாரத்தில் சீர்தூக்கிப் பார்க்காமல் தவறாக நடந்துகொண்டு விட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்," என்று திரு ஓங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திரு ஓங்கின் பதவி விலகல் அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், பதவி விலகும் முடிவு 'முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்று' என்றார். "இப்படி நிகழ்ந்தது குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்பதைக் கட்சி சார்பில் புக்கிட் பாத்தோக் வாசிகளுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
"இடைத் தேர்தல் நடந்து முடியும்வரை புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி நல்ல கரங்களில் இருப்பதை உறுதிப்படுத்துவதே முதல் காரியம்," என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார். "புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் ஏற்புடைய நேரத்தில் இடைத் தேர்தலை நடத்த எண்ணியுள்ளேன். "அதுவரையில் உள்துறை, தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணை அமைச்சரும் ஜூரோங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களைக் கவனித்துக்கொள்வார்," என்று பிரதமர் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.