சிங்கப்பூரின் தமிழ் மேடை நாடக வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் மறைந்த முன்னோடி எழுத்தாளர் திரு சே.வெ.சண்முகம் எழுதிய ஐந்து மேடை நாடகங்களின் தொகுப்பு இம்மாதம் 6ம் தேதி வெளியிடப்பட்டது. 'எழுத்துச்சிற்பி சே.வெ.சண்முகத்தின் மேடை நாடகங்கள்' என்ற தலைப்பிலான நூலை திரு சே.வெ.சண்முகத்தின் துணைவியார் வெளியிட்டார்.
சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நூலில் இடம்பெறும் ஐந்து நாடகங்களில், 1972ஆம் ஆண்டு விக்டோரியா அரங்கில் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற 'கல்யாணமாம் கல்யாணம்' நாடகமும் ஒன்று.
இந்நாடகத்தைக் காண தமிழ் முரசு நிறுவனர் திரு கோ.சாரங்கபாணி வந்திருந்ததாகவும் நாடகத்தைப் பார்த்து அவர் வாய்விட்டுச் சிரித்ததாகவும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நூலாக்க உரையாற்றிய கலைஞர் சங்க மதியுரைஞர் திரு ச.வரதன் கூறினார். திரு சண்முகம் எழுதிய மேடை நாடகங்களில் பலவற்றை இயக்கிய திரு வரதன், தனது நண்பரின் நினைவாக நாடகத் தொகுப்பை வெளியிடப் பெரும் முயற்சி எடுத்ததாகவும் கூறினார்.
கருத்துரை ஆற்றிய தேசிய நூலக வாரிய அதிகாரி திருமதி புஷ்பலதா, தற்காலத்தில் நவீனத் தொழில் நுட்பத்தின் துணையுடன் கையாளப்படும் "interactive" (இருவழித் தொடர்பு) உத்தி அக்காலத்திலேயே புதுமையான முறையில் கையாளப்பட்டதற்கு 'அதுதான் ரகசியம்' நாடகத்தை உதாரணமாகக் கூறினார். இந்நாடகத்தின் கடைசிக் காட்சி முன்கூட்டியே எழுதப்படவில்லை. நடிகர்களுக்குக் கூட நாடகத்தின் முடிவு தெரியாது.
எழுத்தாளர் அமரர் திரு சே.வெ.சண்முகம் எழுதிய ஐந்து மேடை நாடகங்களின் தொகுப்பு இந்த மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர். திரு சே.வெ.சண்முகத்தின் துணைவியார் (இடது) வெளியிட்டார். திரு சண்முகம் எழுதிய மேடை நாடகங்களில் பலவற்றை இயக்கிய திரு வரதன் (வலது) தனது நண்பரின் நினைவாக நாடகத் தொகுப்பை முயற்சி எடுத்து வெளியிட்டதாகக் கூறினார். படம்: ச திருநாவுக்கரசு