பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
கொப்பல், கலபுரகி, பீதர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலும் தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
பெங்களூரில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை வரை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நிலைகுத்திப்போயின.
கலபுரகி மாவட்டத்தில் உள்ள பெனகனஹள்ளி என்னும் சிற்றூரில் இரவு முழுதும் பெய்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. யாதகிரியில் உள்ள பீமா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் கொல்லூர் மற்றும் மதரக்கல் ஆகிய சிற்றூர்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.