நடித்து சம்பாதித்த பணத்தை, புதிதாகத் தொழில் தொடங்கி அதில் முதலீடு செய்யும் நடிகர், நடிகைகள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது சேர்ந்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். நகை வடிவமைப்பு, உடற்பயிற்சிக்கூடம், கட்டுமானம், அழகு நிலையம் என வெவ்வேறு தொழில்களில் முறையே நடிகைகள் தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், நமீதா, சிரேயா போன்றவர்கள் தங்கள் முதலீடுகளைச் செய்துள்ளனர். நடிகர் ஆரியா உணவகம் நடத்துகிறார். இவர்களில் இருந்து சற்று மாறுபட்ட கோணத்தில் பிரகாஷ் ராஜ் காய்கறி வியாபாரம் தொடங்கியிருக்கிறார்.
அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஹைதராபாத் அருகே மணி கொண்டா பகுதியில் 'வெஜ் மந்த்ரா' என்ற பெயரில் நடமாடும் காய்கறி கடை திறந்துள்ளார். அதில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய் க றிகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன்மூலம் விவசாயி கள் தங்களது காய்கறிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாக விற்கலாம் எனவும் பிரகாஷ்ராஜ் கூறினார்.
அண்மையில் தெலுங்கானா பகுதியில் கொண்டாரெட்டி பள்ளி என்ற கிராமத்தை பிரகாஷ்ராஜ் தத்தெடுத்தார். அங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றி பயிற்சி அளித்ததுடன் உதவிகளும் வழங்கினார். அங்குள்ள நிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பதற்காகவும் தற்போது இந்த நடமாடும் காய்கறிக் கடைகளைத் திறந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். சித்ராபுரி காலனி, மணிகொண்டா, ஹைதராபாத் பகுதியில் இதன்மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி கடை திறப்பு விழாவில் திரை நட்சத்திரங்களுடன் அப்பகுதி மக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.