ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'வலியவன்'. இதில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜெய் குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். இப்படத்தையடுத்து ஜெய் நடிப்பில் 'புகழ்' என்னும் படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்புகள் முடிந்து மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜெய் அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார். புதிய படத்தில் அவருக்கு காவல்துறை அதிகாரி வேடமாம்.
அவரது ஜோடியாக அஞ்சலி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜெய், அஞ்சலி ஜோடி 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இவர்களின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. அதேபோல் இந்தப் படத்திலும் இருவருக்கும் கனமான கதாபாத்திரங்கள் அமைந்திருப்பதால் படம் வெற்றி பெறும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்தப் படத்தின் கதையும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும் என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.