துபாய்: இந்தியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக் கிண்ணம் தொடங்குகிறது.
அதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களைத் தவிர்த்து மற்ற அணிகளைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் விசா கிடைத்துவிட்டன.
இதனால், பாகிஸ்தான் அணியின் பயிற்சித் திட்டங்களில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் பாகிஸ்தான் துபாயில் இரண்டு நாள் சிறப்பு பயிற்சி நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது விசா கிடைப்பதில் தாமதமானதால் அந்தச் சிறப்புப் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 29ஆம் தேதி பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடனும் அக்டோபர் 3ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும் பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இரண்டு ஆட்டங்களும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் நடக்கிறது.
ஆனால், இன்னும் விசா அனுமதி கிடைக்காததால் அணியின் பயிற்சி, பயணத் திட்டங்களில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய விசா தொடர்பான சிக்கல்கள் புதிதல்ல. மும்பையில் 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், அதன் பின்னர் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
கடைசியாக பாகிஸ்தான் அணி 2016 டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இந்தியா சென்றது.