வசதி குறைந்தவர்கள், சிறப்புத் தேவையுள்ளவர்கள், உடற்குறையுள்ளோர், மூத்த குடிமக்கள், பிரச்சினையில் சிக்கக்கூடிய இளையர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சிங்கப்பூரின் மரபை அறிந்துகொள்ள புதிய முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தேசிய மரபுடைமைக் கழகம் 'மரபுடைமை வழி பரிவு' எனும் திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், அத்தகையோர் மரபுடைமை நிலையங் களுக்கும் பகுதிகளுக்கும் சென்று அவற்றை அறிந்துகொள்ளும் வகையில் தொடர் போதனைத் திட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இதில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களுக்கு இலவச சுற்றுலாக்கள், அரும்பொருளகங்களில் பயிலரங்குகள், கலந்துரை யாடலுடன் கூடிய நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படவுள்ளன. 'மரபுடைமை வழி பரிவு' திட்டத்தின் வழி, சமூக உண்டியல் மூலம் உதவி பெறும் கிட்டத்தட்ட 12,000 பேரை மூன்றாண்டு காலத் தில் எட்ட தேசிய மரபுடைமைக் கழகம் திட்ட மிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பிரபல கைக்கடிகார விற்பனையாளரான 'கொர்டினா வாட்ச்' $750,000 நன்கொடை வழங்கியுள்ளது. இதற்கு இணையான தொகையை கலாசார, சமூக, இளையர் அமைச்சும் வழங்கும்.
"சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நமது மரபுடைமை சென்று சேர்வது மிக முக்கியம். முடிந்தவரையில் அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயமாகத் திகழவே நாங்கள் விரும்புகிறோம்," என்று கூறினார் இந்தத் திட்டத்தை நேற்றுத் தொடங்கி வைத்துப் பேசிய கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ. தொண்டூழியர்கள், வசதிகுறைந்தோர் என கிட்டத்தட்ட 80 பேர் பங்கேற்ற 'பொன்விழா நடை'யிலும் அமைச்சர் கலந்துகொண்டார். தேசிய அரும்பொருளகத்தில் இருந்து ஃபோர்ட் கேனிங் பூங்கா, சிங்கப்பூர் அஞ்சல்தலை அரும்பொருளகம் வரை இடம்பெற்ற இந்த நடை, 'மரபுடைமை வழி பரிவு' திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக அமைந்தது. இந்த முயற்சிக்கு நன்கொடை வழங்கவும் தங்களது ஊழியர்களை இதில் ஈடுபடுத்தவும் நிறுவனங்கள் ஆர்வத்துடன் முன்வரும் என தேசிய மரபுடைமைக் கழகம் எதிர் பார்க்கிறது.
நேற்று இடம்பெற்ற 'பொன்விழா நடை' நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அதன் ஒரு பகுதியாக ஸ்பைஸ் கார்டன் எனப்படும் நறுமணப் பொருட்கள் தோட்டத்திற்குச் சென்றனர். படத்தில் நடையில் பங்கேற்றோருடன் அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: சாவ் பாவ்