போதைப்பொருள் தொடர்பில் குற்றம் புரிந்த ஒருவரை, தன்னுடன் பணிபுரியும் சக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரி தாக்கவில்லை என்று பெண் காவல் அதிகாரி ஒருவரிடமும் மாவட்ட நீதிபதியிடமும் சிஎன்பி அதிகாரி முகம்மது ஹைக்கல் ரஹ்மான் பொய்யுரைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
போதைப்பொருள் தொடர்பில் குற்றம் புரிந்திருப்பதாக மலேசியரான சிவபாலன் கன்னியப்பன் என்பவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற, அவரை சிஎன்பி அதிகாரியாக இருந்த வெங்கடேஷ் ராஜ் நயினார் நாகராஜன் தாக்கியதாகவும் வெங்கடேஷ் அப்போது மதுபோதையில் இருந்ததாகவும் முன்னதாகக் கண்டறியப்பட்டது.
வெங்கடேஷ் அவ்வாறு செய்யவில்லை என்று 34 வயது ஹைக்கல் ஓர் அரசாங்க அதிகாரியிடமும் பின்னர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் முன்னிலையிலும் பொய்யுரைத்ததன் தொடர்பில் கடந்த புதன்கிழமையன்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிவபாலனை 2017ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியன்று தாக்கியதன் தொடர்பில் வெங்கடேஷுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து பொய்யுரைத்ததாக ஹைக்கல் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வெங்கடேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெங்கடேஷுக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு, வெங்கடேஷின் வழக்கு விசாரணையின்போது ஹைக்கலின் நடத்தை குறித்து மேலும் விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம், காவல் துறைக்கு உத்தரவிட்டதாக சிஎன்பி பேச்சாளர் குறிப்பிட்டார்.
உடம்பு வலி தொடர்பில் சிவபாலனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, தான் தாக்கப்பட்டதாக சிவபாலன் கூறியிருந்ததாக அறியப்படுகிறது.
இதற்கிடையே, சிவபாலன் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 13 பிரம்படிகளும் சிவபாலனுக்கு விதிக்கப்பட்டன.
ஹைக்கல் மீதான வழக்கு விசாரணை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.