ஈசூன் வட்டாரத் தொழிற்பேட்டைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 10) மாலை தீ மூண்டது.
புளோக் 61, ஈசூன் இண்டஸ்ட்ரியல் பார்க் ‘ஏ’யில் ஏற்பட்ட தீ குறித்து செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அதிகாரிகள் அங்கு சென்றபோது, கட்டடத்தின் ஆறாவது தளத்தில் உள்ள இரண்டு இடங்களில் தீ பரவுவதைக் காண முடிந்ததாக ஃபேஸ்புக்கில் அது பதிவிட்டது.
தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.
தீயணைப்புப் பணி தொடர்வதால் பொதுமக்கள் அந்த இடத்திற்கு அருகில் செல்ல வேண்டாமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எம்1, ஸ்டார்ஹப், சிங்டெல் போன்ற தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களின் பயனீட்டாளர்களான அந்தத் தொழிற்பேட்டையின் வாடகைதாரர்களுக்கும் ஆலோசனைக் குறிப்பு அனுப்பப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
எஸ்ஜிசெக்யூர் செயலி மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.