விருதுநகர்: கடந்த தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த கூட்டணி அப்படியே நீடித்திருந்தால் அதிமுக, திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர இயலாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவைக்கேற்ப தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுபரிசீலனை செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தனது முடிவு தவறு என்பதை விஜயகாந்த் உணர்வார் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கனிமொழி எம்பி கூறியுள்ளார்.