சேலம்: சேலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடர்ச்சியாக கனமழை பெய்தது. அதனால் அங்குள்ள சிவதாபுரம் பகுதியில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் சாலைகளை ஆக்கிரமித்ததோடு பல வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
சாலைகளில் வெள்ளநீர் வடியாமல் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நீண்ட நேரமாக தடைப்பட்டிருந்தது. சிவதாபுரமே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லமுடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.
சில இடங்களில் சாக்கடைக் கால்வாய்களில் உள்ள அடைப்புகளால் தேங்கிக் கிடந்த சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து பல இடங்களில் தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிவதாரபுரம் அதிமுக கவுன்சிலர் தலைமையில் அதிமுகவினரும் அப்பகுதி குடியிருப்பாளர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மழை நீர் தேங்கிய இடங்களை வந்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் மீண்டும் தேங்காதபடி வடிகால் அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்தார். அதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர், சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஈரோட்டில் நெற்பயிர்கள் சேதம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கன மழை தொடர்ந்து புதன்கிழமை வரை பெய்தது.
ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் 30 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
இதனால், ரூ.20 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி அருகே தாழைக் கொம்புபுதூர் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளநீர் சூழ்ந்தது. வருவாய்த் துறையினர் அப்பகுதியை பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் நவம்பர் 10ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.