கடவுச்சீட்டு இல்லாமல் கடற்பாலத்தைக் கடந்து மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிங்கப்பூரருக்கு மலேசிய நீதிமன்றம் 12 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. நேற்று முன்தினம் குற்றத்தை ஒப்புக்கொண்ட 47 வயது டான் ஹோக் சியேவுக்கு நீதிபதி சலாவட்டி ஜம்பாரி சிறைத் தண்டனை விதித்தார். டானிடம் சீன மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அப்போது சிங்கப்பூரில் தாம் தேடப்படுவதையும் ஆயுதக் கொள்ளை, போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
தீர்ப்பு வழங்கி பேசிய நீதிபதி, "மலேசியாவுக்குள் சட்டவிரோமாக நுழைந்த சம்பவம் மட்டுமல்ல. சொந்த நாட்டின் சட்டங்களிலிருந்து ஒருவர் தன்னை மறைத்துக் கொள்வதாகும்," என்று குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் அவரது கைபேசி மணியடித்ததால் அதனை பறிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதே நீதிமன்றத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 86 வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு குடிநுழைவுக் குற்றச்செயல்களுக்காக இரண்டு வாரம் முதல் 15 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முப்பது பெண்கள் அடங்கிய வெளிநாட்டவர்கள் பங்ளாதேஷ், மியன்மார், இந்தோனீசியா, வியட்னாம், சீனா, இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.