அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டுத் தாக்குதல் தொடர்பில் 11 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குர்திய பாட்டாளிக் கட்சி அந்தத் தக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆதாரங்கள் சுட்டுவதாக துருக்கி தெரிவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை நடந்த அந்தத் தாக்குதலில் குறைந்தது 36 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன், பயங்கர வாதத்தை துடைத்தொழிக்கப் போவதாக சூளுரைத்தார்.
அத்தாக்குதல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் துருக்கி நாட்டு பாதுகாப்புப் படையினரை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது என்றும் திரு எர்டோகன் கூறினார். துருக்கியிலும் ஈராக்கிலும் குர்தியப் போராளிகள் மீதான தாக்குதலை துருக்கிய பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். அங்காராவில் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 125 பேர் காயமடைந்தனர்.
துருக்கியில் குர்தியப் போராளிகள் அண்மைய மாதங்களில் பல் வேறு தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். அங்காராவில் குர்தியப் போராளிகள் பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். அங்காராவில் ஐஎஸ் போராளிகளும் அண்மையில் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அங்காராவில் அரசாங்கக் கட்டடங்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.